உபாதா இப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள், மாபெரும் பத்ர்ப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். மேலும், நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வருவதற்கு முன்னர், மக்காவில் இருக்கும் போது, மினாவில் உள்ள அகபா எனும் இடத்தில் ஓர் இரவு நேரம், நபியவர்களுக்கு உதவுவதாக வாக்களிக்க வந்த தமது சமுதாயத்தினருக்குத் தலைவராகவும் இருந்தவர். அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டிருந்த நிலையில் சில விடயங்களுக்கு உறுதிமொழி அளிக்குமாறு வேண்டினார்கள். முதலாவது : அல்லாஹ்வை வணங்கும் விடயத்தில் எதையும் - அது மிகக் குறைவானதாக இருப்பினும் - இணைவைக்காமல் இருத்தல். இரண்டாவது : திருடக்கூடாது. மூன்றாவது : விபச்சாரம் எனும் மானக்கேடான பாவத்தை செய்யக்கூடாது. நான்காவது : தமது ஆண்பிள்ளைகளை வறுமைக்குப் பயந்தோ, பெண்பிள்ளைகளை அவமானத்திற்குப் பயந்தோ கொலை செய்யக் கூடாது. ஐந்தாவது : தமது கைககள் மற்றும் கால்களால் இட்டுக்கட்டி, பொய்களைக் கொண்டுவராமல் இருத்தல். ஏனெனில், பெரும்பாலான செயல்கள் இவ்விரு உறுப்புக்கள் மூலமாகவே நடக்கின்றன. ஏனைய உறுப்புக்கள் அதனுடன் கூட்டுச் சேர்ந்தாலும் சரியே. ஆறாவது : நல்லவிடயங்களில் நபி (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்யக்கூடாது. அவர்களில் யார் இந்த உறுதிமொழியில் உறுதியாக இருந்து, அதைப் பேணிக்கொள்கின்றாரோ, அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. கூறப்பட்டவற்றில் - இணைவைப்பல்லாதவற்றை - யாராவது செய்து, அதற்காக இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால், அது அவருக்கான குற்றப்பரிகாரமாகும். அதைக் கொண்டு குற்றம் நீங்கிவிடும். அவற்றில் ஏதாவதொன்றை யாராவது செய்து, பின்பு அல்லாஹ் அவரை மறைத்து விட்டால், அவரது விடயம் அல்லாஹ்விடம் உள்ளது. அல்லாஹ் நாடினால், அவரை மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். (அப்போது) சமூகமளித்திருந்தவர்கள் அனைவரும் அதற்கு உறுதிமொழி அளித்தார்கள்.