இங்கு நபியவர்கள், ஷைத்தானுடைய நிலையையும், இரவுத்தொழுகைக்காக, அல்லது பஜ்ர் தொழுகைக்காக எழும்ப நினைக்கும் மனிதனோடு அவன் செய்யும் போராட்டத்தையும் விளக்குகின்றார்கள். ஒரு விசுவாசி தூங்கச் சென்றால், ஷைத்தான் அவனது பிடரியின் மீது மூன்று முடிச்சுக்களை இடுவான். அந்த முஃமின் கண்விழித்து, பின்னர் ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு செவிசாய்க்காமல் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும். அவன் வுழூ செய்தால் அடுத்ததும் அவிழ்ந்து விடும். அவன் எழுந்து தொழுதால், மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்துவிடும். வணக்கத்தில் ஈடுபடுவதற்கான பாக்கியத்தை அவனுக்கு அல்லாஹ் வழங்கிய மகிழ்ச்சியினாலும், ஷைத்தானுடைய முடிச்சுக்களும், தடுப்புக்களும் நீங்கிவிட்டதாலும் நல்லுள்ளத்துடனும், உற்சாகத்துடனும், அல்லாஹ் அவனுக்கு வாக்களித்துள்ள நன்மைகளையும், பாவமன்னிப்பையும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்த நிலையிலும் காலையை அடைவான். அவ்வாறில்லாவிட்டால், கெட்ட உள்ளத்துடனும், கவலையான மனத்துடனும், நற்கருமங்களில் ஈடுபட சோம்பல்பட்ட நிலையிலும் தான் காலையை அடைவான். ஏனெனில் அவன் ஷைத்தானின் விலங்குகளினால் விலங்கிடப்பட்டுள்ளான். ரஹ்மானின் நெருக்கத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுள்ளான்.