முஆத் இப்னு ஜபல்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்று அழைக்கப்படும் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு அடியார்கள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை நீர் அறிவீரா? மேலும் அடியார்களுக்கு அல்லாஹ் ஆற்ற வேண்டிய கடமை யாது என்பதையும் நீர் அறிவீரா என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ' அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனை மாத்திரமே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்' என்று கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்கு இந்த நற்செய்தியை (இப்போது) அறிவிக்காதீர்;. அவர்கள் இந்தச் செய்தியை மட்டுமே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதில் அளித்தார்கள். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

நபி ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றியும் அல்லாஹ் அடியார்களுக்குச்செய்ய வேண்டிய கடமை குறித்தும் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய -உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருக்கும் ஏகத்துவவாதிகளை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும். பின்னர் முஆத் அவர்கள் நபியவர்களை விளித்து அல்லாஹ்வின் தூதரே இந்தச் சிறப்பை அறிந்து மக்கள் மகிழ்ச்சியடைவதற்காக நான் அவர்களுக்கு இதனை அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் இதில் அவர்கள் (அடியார்கள்) நற்காரியங்களில் ஈடுபடாது இந்த விடயத்திலே உறுதியாக இருந்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் இதனை மக்களிடம் கூறுவதை தடுத்தார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • அல்லாஹ் தனது அடியார்களுக்கு விதித்துள்ள கடமைகளான அவனை மாத்திரம் வணங்கி வழிபட்டு, அவனுக்கு எதனையும் இணையாக்காது இருத்தல் என்பதனை தெளிவுபடுத்தல்.
  • அல்லாஹ் தனக்கென அவனின் அளப்பரிய கொடையினால் அடியார்களுக்கு கட்டாயம் செய்யவேண்டும் என தன்மீது விதித்துக்கொண்ட கடமை பற்றிய தெளிவுபடுத்தியிருத்தல். அதாவது அல்லாஹ் அடியார்களுக்கு செய்யவேண்டியது அவனுக்கு இணைவைக்காது இருந்த அடியார்களை சுவர்க்கத்தில் நுழைவித்து, அவர்களை வேதனை செய்யாதிருப்பதாகும்.
  • அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காத ஏகத்துவாதிகளுக்கு பெரும் நற்செய்தி இந்த ஹதீஸில் காணப்படுகிறது. அவர்களின் இறுதியாக .செல்லுமிடம் சுவர்க்கமாகும்
  • முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவை மறைத்தல் என்ற குற்றத்திற்கு பயந்து தனது மரணத்திற்கு முன் இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
  • எந்த வணக்கவழிபாடோ, அல்லது ஷரீஆ குறிப்பிடும் தண்டனைகளோ அல்லது வரையறைகளோ அற்ற ஹதீஸ்களை மக்கள் விளங்கிகொள்ளமாட்டார்கள், அல்லது பிழையாக விளங்குவதற்கு இடமுன்டு எனும் அச்சம் இருந்தால் அவ்வாறான ஹதீஸ்களை பொதுவெளியில் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துதல்.
  • அல்லாஹ்வை ஏற்றுவாழ்ந்த பாவிகளான ஏகத்துவாதிகளின் முடிவு அல்லாஹ்வின் நாட்டத்தின் பால் உள்ள ஒரு விடயமாகும். அல்லாஹ் நாடினால் அவர்களை தண்டிக்கவோ அல்லது அவர்களை மன்னிக்கவோ முடியும். ஆனால் இறுதியாக அவர்கள் செல்லுமிடம் சுவர்க்கமாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு