நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலில் நுழைந்து, இரண்டு ரக்அத்களை, நிலை, ருகூஉ மற்றும் ஸுஜூத் என எதிலும் ஆறுதலாக இருக்காமல் வேகமாகத் தொழுது முடித்தார்கள். அவர் தொழுவதை நபியவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அம்மனிதர் பள்ளியில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்த நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறினார். நபியவர்களும் அவரது ஸலாமுக்கு பதில் அளித்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள் : நீங்கள் திரும்பிச் சென்று, உங்களது தொழுகையை மீளவும் தொழுங்கள். ஏனெனில் நீங்கள் தொழவே இல்லை. அவர் மீண்டும் திரும்பிச் சென்று, ஏற்கனவே தொழுதது போன்றே மீண்டும் வேகமாகத் தொழுது விட்டு, நபியவர்களிடம் வந்து, அவர்கள் மீது ஸலாம் கூறினார். அப்போதும் நபியவர்கள், நீங்கள் திரும்பிச் சென்று, உங்களது தொழுகையை மீளவும் தொழுங்கள். ஏனெனில் நீங்கள் தொழவே இல்லை என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை செய்தார்கள். அப்போது அம்மனிதர், 'உங்களை சத்தியத்தைக் கொடுத்து அனுப்பிய அல்லாஹ்வின் சத்தியமாக! இதைவிட அழகாக என்னால் தொழமுடியாது. நீங்கள் எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் அவரைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் : நீங்கள் தொழுகைக்காக நின்றால், முதலில் தக்பீரதுல் இஹ்ராமைக் கூறுங்கள். பின்பு ஸூரா அல்பாதிஹாவையும், அல்லாஹ் நாடிய அளவு வேறு வசனங்களையும் ஓதுங்கள். பின்பு ருகூஉ செய்து, அந்த ருகூஇல் அமைதியடையும் வரை இருங்கள். அதாவது, உங்கள் இரு உள்ளங்கைகளையும் உங்கள் முழங்காலில் வைத்து, உங்களது முதுகை சமாந்திரமாக வைத்து, சரியான முறையில் ருகூவை செய்வீராக. பின்பு, எழுந்து, எழும்புகள் அதன் மூட்டுக்களை நோக்கி மீளும் அளவுக்கு உங்களது முதுகந்தண்டை நேராக வைத்து, சரியாக நேராக நிற்பீராக. பின்பு ஸுஜூது செய்து அதில் அமைதியாக இருப்பீராக. அதாவது, மூக்குடன் நெற்றியையும், இரு உள்ளங்கைகளையும், முழங்கால்களையும், பாதங்களின் விரல் ஓரங்களையும் நிலத்தில் பட வைப்பீராக! பின்பு எழுந்து, இரு ஸுஜூதுகளுக்கு மத்தியில் அமைதியாக அமர்வீராக! பின்பு இவ்வாறே உங்களது ஒவ்வொரு ரக்அத்திலும் செய்வீராக.