நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக ஹாரிஸா பின் வஹ்ப் அல் குஸாஈ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'சுவனவாதிகளை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? பலவீனமான, பணிவாக நடக்கும் ஒவ்வொருவரும் (சுவனவாதிகள் தாம்). அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்து விட்டால், அதை அல்லாஹ் நிறைவேற்றிவிடுவான். நரகவாதிகளை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? வன்மையான, பெருமைபிடித்த, கர்வம் கொண்ட ஒவ்வொருவரும் (நரகவாதிகள் தான்)'. சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள் சுவானவாதிகளின் சில பண்புகளையும், நரகவாதிகளின் சில பண்புகளையும் கூறுகின்றார்கள். பெரும்பாலான சுவானவாதிகள், பணிவுத் தன்மையோடு, அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்பவர்கள். சிலபோது, மனிதர்கள் கூட அவர்களை பலவீனமானவர்களாகக் கண்டு, அற்பமாகக் கருதுவார்கள். ஆனால், இவ்வாறு தன்னைத் தாழ்த்திக் கொள்பவர்கள் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து அவனைக்கொண்டு சத்தியம் செய்துவிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி, அவர்கள் எதிர்பார்த்ததை அடைய வைப்பான். அவர்களது அழைப்புக்கு பதிலளிப்பான். பெரும்பாலான நரகவாதிகள், இரக்கமற்ற வன்மையான, மோசமாக விவாதிப்பவர்களாக அல்லது நன்மைக்கு அடிபணியாத கெட்டவர்களாக இருப்பார்கள். 'ஜவ்வாழ்' எனப்படுபவன், பெருமையடிக்கும், அதிகம் சாப்பிடும், பிரமாண்டமான உடலமைப்பைக் கொண்ட, தன் நடையில் அகம்பாவம் காட்டும், கெட்ட குணம் கொண்டவனாகும். அவன் சத்தியத்தை மறுத்தும், ஏனையோரை அற்பமாகக் கருதியும் பெருமையடித்துக் கொண்டிருப்பான்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • சுவனவாதிகளின் பண்புகளை ஏற்று நடக்கத் தூண்டல், நரகவாதிகளின் பண்புகளை விட்டும் எச்சரித்தல்.
  • அல்லாஹ்வுக்காக பணிந்துசெல்லல். அவனது ஏவலுக்கும், விலக்கலுக்கும் கட்டுப்படல். படைப்புக்களிடம் பெருமையடிக்காது பணிவைக் கடைப்பிடித்தல்.
  • இப்னு ஹஜர் (ரஹ்) இவ்வாறு கூறுகின்றார்கள்: அதாவது, பெரும்பாலான சுவனவாதிகள் இவர்களாகவும், பெரும்பாலான நரகவாதிகள் கூறப்பட்டுள்ள எதிர்ப்பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இது இரு தரப்பினரையும் முழுமையாக விவரிப்பதல்ல.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு