அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: (முற் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தன்னுடைய (அலுவலரான) வாலிபரிடம், '(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக் கூடும் என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவரின் பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்துவிட்டான். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் குறித்துக் குறிப்பிடுகிறார். அவர் மனிதர்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அல்லது தவணை அடிப்படையில் வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல முறையில் நடந்து கொள்ளக் கூடியவராக இருந்தார். மனிதர்களிடமிருந்து கடனை மீளப் பெற்றெடுக்கும் தனது பணியாளனுக்கு அம்மனிதர் பின்வருமாறு கூறிக்கொண்டிருந்தார் : நீ கடனாளியிடம் சென்று அவர் உம்மிடம், கடனை நிறைவேற்ற தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறினால் அவனுக்கு தவணை கொடுப்பதன் மூலம், அல்லது வற்புறுத்தி கேட்காமல் விடுவதன் மூலம் அவனை மன்னித்துவிடுவாயாக.' அல்லது சிறிது குறைவாக இருந்தாலும் கடனாளியிடம் உள்ளதை பெற்றுக் கொள்வதன் மூலம் விட்டுக் கொடுப்பதாகும்.இவ்வாறு இலகு படுத்தி நடந்து கொள்வதற்கான காரணம்; அல்லாஹ்வும் பாவங்களை மன்னித்து விடுவான் என்ற ஆவல் மற்றும் எதிர்ப்பார்பினாலுமாகும். அவர் மரணித்ததும் அல்லாஹ் அவரின் தவறுகளைப் பொருந்தி அவரை மன்னித்துவிட்டான்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • மக்களுடன் கொடுக்கல் வாங்கலின் போது நல்ல முறையில் நடந்து கொள்வதும் அவர்களில் வசதியின்றி; சிரமப்படுபவரிடம் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதும் மறுமையில் ஒரு அடியான் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரும் வழியாகும்.
  • படைப்பின் மீது இரக்கம், இறை பக்தி, அவருடைய கருணையில் நம்பிக்கை ஆகியவை பாவ மன்னிப்புக்கான காரணங்களில் ஒன்றாகும்.