இந்த ஹதீஸில் நன்மை (புன்னியம்-) மற்றும் பாவம் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நன்மையான குணங்களில் மிகவும் உயர்ந்தது அல்லாஹ்வை பயப்படுவதன் மூலம் அல்லாஹ்வுடன் சிறந்தமுறையில் நடத்தல். அத்துடன் சிரமத்தைத் தாங்கிக்கொள்ளுதல், கோபமின்மை, முகமலர்ச்சியுடன் இருத்தல், கனிவான பேச்சு, உறவுகளைப் பேணுதல், பணிவு, கட்டுப்படுதல், மென்மையை கடைப்பிடித்தல், அழகிய முறையில் உறவாடுதல், தோழமை கொள்ளுதல் போன்றவற்றை கடைப்பிடித்து மனிதர்களுடன் நடப்பது நன்மை சார்ந்த விடயமாகும். பிர் என்பது இதயத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதாகும். பாவம் மனித உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது ஒரு வகை தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துவது. இதன் விளைவாக உள்ளத்தில் சந்தேகமும், குறித்த விடயம் தவறு என்பதால் அது குறித்து மனதில் பயமும்; ஏற்படுவதோடு, குறித்த விடயம் அசிங்கமானது என்பதால் மனிதர்களில் கௌரவமானவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தெரிந்து கொள்வதை மனம் விரும்பாது. ஏனெனில் மனமானது இயல்பில் நல்ல விடயங்களை பிறர் காண்பதையே விரும்புகிறது. இதனால், பிறர் கண்டுகொள்வதை விரும்பாத, மனம் வெறுக்கின்ற செயற்பாடுகளாயின் அது பாவமாகும். அதில் எவ்வித நன்மையும் கிடையாது. உம்மிடம் இருக்கும் விடயம் பற்றி மக்கள் நல்லது என்று தீர்ப்பு கூறினும், அது பற்றிய சந்தேகமும் குற்ற உணர்வும் உம் மனதில் இருக்குமாயின் அது பாவமான ஒரு விடயமாகும். மக்கள் தீர்ப்பு ஒரு போதும் ஒரு சந்தேகமான ஒருவிடயத்தை சரிபடுத்தமாட்டாது. சில வேளை தீர்ப்பு கூறுபவர் குறித்தவிடயம் பற்றி போதிய அறிவின்றி தீர்ப்பு கூறிவிடுவார். குறித்த தீர்ப்பானது மார்க்க ஆதரத்தின் அடிப்படையில் இருப்பின் தீர்ப்புக்கோரியவரின் மனம் திருப்தியடையவில்லையெனில் மீண்டும் அவரிடம் செல்வது கடமையாகும்.