நபியவர்கள் அதிகம் தனது பிரார்த்தனையில், மார்க்கத்திலும், வணக்க வழிபாட்டிலும் ஸ்திரத்தன்மையையும் உறுதியையும் அல்லாஹ்விடம் வேண்டுபவர்களாகவும், தடம் புரள்தல் மற்றும் வழிகேடு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பையும் கோருபவர்களாகவும் இருந்தார்கள். இந்த துஆவை நபியவர்கள் அதிகம் ஓதுவதைக் பார்த்து அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது நபியவர்கள் அவரிடத்தில் 'உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' எனக் கூறினார்கள். உள்ளமானது இறைவிசுவாசம் மற்றும் இறைநிராகரிப்பின் உரைவிடமாகும். உள்ளமானது ஒரே நிலையில் இல்லாது அடிக்கடி நிலைமாறுவதினால் அரபியில் கல்ப் என அழைப்பர். அது மாத்திரமின்றி அதிக வெப்பத்தில் கொதிக்கும் பானையில் உள்ள தண்ணீரை விடவும் உள்ளமானது கொந்தளிக்கக் கூடியது. எனவே யாருக்கு அல்லாஹ் உறுதியை நாடுகிறானோ அவனது உள்ளத்தை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்யவும், மார்க்கத்தில் உறுதியாக இருக்கும் வாய்ப்பையும் வழங்குகிறான். யாரை அல்லாஹ் நேர்வழியிலிருந்து திருப்ப நாடுகிறானோ அவனை தடம்புரளல் மற்றும் வழிகேட்டின் பால் விட்டுவிடுகிறான்.