நபியவர்கள் நான்கு விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றார்கள் : முதலாவது : யா அல்லாஹ்! உனது (உலக, மார்க்க) அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், (மேலும், இஸ்லாத்தில் நான் நிலையாக இருக்கவும், அருட்கொடைகளை இல்லாதொழிக்கும் பாவங்களில் வீழ்ந்துவிடாமல் தூரமாக இருக்கவும்) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இரண்டாவது : 'உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும்,' (அதாவது, அது சோதனையாக மாறிவிடுவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னிடம் நிரந்தரமான பாதுகாப்பையும், வலிகள் மற்றும் நோய்களை விட்டுப் பாதுகாப்பையும் கேட்கின்றேன். மூன்றாவது : உனது தண்டனைகள் (சோதனைகளாகத்) திடீரென வருவதை விட்டும். சோதனைகளும் தண்டனைகளும் திடீரென வந்து விட்டால், தவ்பா செய்து சரிசெய்து கொள்வதற்கான ஒரு காலம் இருக்காது. அதனால் வரும் சோதனை மிக மோசமானதாக இருக்கும். நான்காவது : 'உனது அனைத்துக் கோபங்களை விட்டும்' (மேலும், உனது கோபத்தை ஏற்படுத்தும் காரணிகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.) நீ யார் மீது கோபம் கொள்கின்றாயோ, அவர் தோற்று, நட்டப்பட்டு விடுவான். இங்கு நபியவர்கள் பன்மையைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டுவரக் காரணம், அல்லாஹ்வின் கோபத்திற்குக் காரணமாக அமையும், அனைத்து, சொற்கள், செயற்கள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கிக் கொள்ளுவதற்காகும்.