நபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்: யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் (ஈருலகிலும்) உன்னிடம் (நோய்கள், சோதனைகள், உலகச் சிரமங்கள், மனோ இச்சைகள், மார்க்க ரீதியான குழப்பங்கள் அனைத்தையும் விட்டு) பாதுகாப்பை நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் (அதாவது, இணைவைப்பு, பித்அத்கள், பாவங்கள் ஆகியவற்றை விட்டும்) எனது உலகத்திலும் (அதாவது, சோதனைகள், நோவினைகள், தீங்குகள் ஆகியவற்றை விட்டும்) எனது குடும்பத்திலும் (அதாவது, எனது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களில்) எனது சொத்துக்களிலும் (எனது பணம் மற்றும் தொழிலில்) பாதுகாப்பையும் (குறைகளை விட்டு ஈடேற்றத்தையும்) (பாவங்களை விட்டு) மன்னிப்பையும் நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்து விடுவாயாக! (அதாவது, என்னிடமுள்ள குறைகளையும், தவறுகளையும், கவனயீனத்தையும் மறைத்து, எனது பாவங்களை மன்னித்து விடுவாயாக) எனது பயத்தை (அதாவது அச்சத்தையும், திடுக்கத்தையும்) நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னை (சோதனைகள் மற்றும் நோவினைகளை விட்டுப்) பாதுகாத்துவிடுவாயாக! (இங்கு எல்லாத் திசைகளில் இருந்தும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டமைக்கான காரணம், சோதனைகளும், ஆபத்துக்களும் மனிதனை வந்தடைவது இந்தத் திசைகளில் ஒன்றின் ஊடாகவே) எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் (நான் பராமுகமாக இருக்கும் நிலையில் திடீரென நிலத்துக் கீழ் இழுத்தெடுக்கப்படுவதன் மூலமாக) பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.