நபியவர்களின் கருத்தாழமிக்க துஆக்களில் பின்வரும் துஆவும் ஒன்றாகும்: என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும் (பாவங்களையும்) அறியாமையையும் (நான் அறியாமல் நடந்தவற்றையும்) மன்னித்துவிடுவாயாக! எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும் (எனது பொடுபோக்குகளையும், நான் அளவு கடந்ததையும்) என்னை விட நீ அறிந்துவைத்திருப்பவற்றையும் (நீ அவற்றை அறிந்து வைத்துள்ளாய், நானோ அவற்றை மறந்துள்ளேன்) மன்னித்துவிடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், (நான் பாவம் என அறிந்துகொண்டே செய்தவற்றையும்) எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் (பரிகாசமாக நான் செய்தவற்றையும், இவ்விரு நிலைகளிலும் என்னிடமிருந்து வெளிப்பட்ட அனைத்தையும்) மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. (மேற்கூறிய குறைகள், பாவங்கள் அனைத்துமே என்னிடம் உள்ளன.) யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள் (கடந்த காலத்தில் செய்தவைகள்) பிற்படுத்தியவைகள் (பின்னர் செய்யப்போகும் பாவங்கள்) மறைத்துக்கொண்டவைகள் (இரகசியமாகச் செய்தவைகள்) பகிரங்கப்படுத்தியவைகள் (பகிரங்கமாகச் செய்தவைகள்) என அனைத்தையுமே மன்னித்து விடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! (நீ நாடியோரை உனது அருளை நோக்கி முற்படுத்தி, உனக்குப் பொருத்தமானவற்றைச் செய்ய அவர்களுக்கு அருள் புரிகின்றாய். நீ நாடியவர்களுக்கு உதவி புரியாமல், கைவிட்டுப் பிற்படுத்துகின்றாய். எனவே, நீ பிற்படுத்துபவற்றை யாராலும், முற்படுத்தவோ, நீ முற்படுத்தும் விடயங்களை யாராலும் பிற்படுத்தவோ முடியாது.) நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன். (முழுமையான சக்தியும், பூரணமான நாட்டமும் கொண்டவன். நீ நாடிய அனைத்தையும் நீ செய்வாய்!)