நபி (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ தர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : யாராவது ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனைப் பார்த்து, 'பாவி' என்றோ, 'காபிர்' என்றோ கூறி, உண்மையில் அம்மனிதன் அவ்வாறில்லாவிட்டால், அத்தீர்ப்பு அவனுக்கே திரும்பி வந்துவிடும். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள், யாராவது ஒருவர் இன்னொருவரைப் பார்த்து, 'நீ பாவி' அல்லது 'நீ காபிர்' என்று கூறி, உண்மையில் அவன் அவ்வாறில்லாவிட்டால், கூறப்பட்ட அப்பண்பிற்குத் தகுதியானவனாக அவனே இருப்பான் என்றும், அவனது வார்த்தை அவனை நோக்கியே திரும்பும் என்றும் எச்சரிக்கின்றார்கள். உண்மையில் அவன் அவ்வாறிருந்தால், அது இவருக்குத் திரும்பி வரமாட்டாது. ஏனெனில், அவன் கூறிய விடயம் உண்மையாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • மார்க்க நியாயங்கள் இன்றி, மனிதர்களைப் பார்த்து 'காபிர்' என்றோ, 'பாவி' என்றோ கூறாமல் இருத்தல்.
  • மக்கள் மீது தீர்ப்பு வழங்க முன்னர் உறுதிப்படுத்திக் கொள்ளல்.
  • இப்னு தகீக் அல் ஈத் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : 'காபிராக இல்லாத ஒரு முஸ்லிமைப் பார்த்து 'காபிர்' எனக் கூறுவதை இது கடுமையாக எச்சரிக்கின்றது. இது தப்பமுடியாத சிரமமான விடயமாகும்.
  • இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 'இவ்வாறு கூறுபவர் (அவர் கூறியது சரியாக இருந்தால்) பாவியாகவோ, காபிராகவோ மாற மாட்டார் என்பதனால், 'நீ பாவி' என்று அவர் கூறியது தவறல்ல என்று அர்த்தம் கொள்ளமுடியாது. மாறாக, இங்கு விரிவான விளக்கம் உள்ளது. இவர் அம்மனிதனது நிலையை உணர்த்தி, அம்மனிதனுக்கோ, அல்லது வேறொருவருக்கோ உபதேசம் செய்ய நாடினால் அனுமதிக்கப்படும். அவ்வாறல்லாமல், அவரைக் குறைகூறி, பகிரங்கப் படுத்தவும், நோவினை செய்யவும் நாடினால் அனுமதிக்கப்படமாட்டாது. ஏனெனில், அவர் மறைத்து, அழகிய முறையில் கற்றுக்கொடுத்து உபதேசிக்குமாறே ஏவப்பட்டுள்ளார். எனவே, அதை மென்மையான முறையில் நிறைவேற்ற முடியுமென்றால், வன்மையான முறையில் நிறைவேற்றமுடியாது. ஏனெனில், சிலவேளை அவ்வணுகுமுறை காரணமாக, அவர் அதில் விடாப் பிடியாக இருக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான மனிதர்களிடம்- குறிப்பாக ஏவுபவர் ஏவப்படுபவரை விட தாழ்ந்தவராக இருந்தால் - இயல்பாகவே தன்முனைப்பு உள்ளது.