நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பாவங்களில் மிகப்பெரியது குறித்து வினவப்பட்டது; அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: பெரும்பாவங்களில் மிகவும் பெரியது பெரிய இணைவைப்பாகும். பெரிய இணையென்பது அல்லாஹ்வுக்கு அவனின் உலூஹிய்யாவிலும், ருபூபிய்யாவிலும், அவனுக்கேயுரிய பெயர்களிலும் பண்புகளிலும் நிகர் அல்லது உவமையான விடயங்களை ஏற்படுத்துவதாகும். இக்குற்றத்தை அல்லாஹ் தவ்பாவின் மூலம் மாத்திரமே மன்னிப்பான். இதே பாவத்தில் -இணைவைப்பில்- ஒருவர் மரணித்துவிட்டால் அவர் நிரந்தர நரகில் இருப்பார். இரண்டாவது : ஒருவர் தனது பிள்ளையை அவரோடு உணவைப் பங்குபோட்டு உண்ணும் என்ற பயத்தில் கொலை செய்வதாகும். ஓர் உயிரை கொலை செய்வது ஹராமாகும். அதுவே கொலைசெய்யப்பட்டவர், கொலையாளியின் உறவுக்காரராக இருந்தால் பாவத்தின் கொடூரம் இன்னும் அதிகமாகும். அதுவே அல்லாஹ் வாழ்வாதாரத்தின் வழியை இவரது வழியில் வைத்திருக்க, அதைத் துண்டிக்கும் நோக்கில் கொலை செய்தால் பாவத்தின் வீரியம் இன்னும் அதிகரிக்கும். பின்னர் தனது அயலவரின் மனைவியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகும். அதாவது அயலவரின் மனைவியை மயக்கி அவளை அடிபணிய வைத்து அவளுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகும். விபச்சாரம் ஹராமாகும். அதுவே உபகாரம், நலவு செய்யுமாறும், நல்ல நட்புடன் இருக்குமாறும் மார்க்கம் உபதேசித்துள்ள அயலவரின் மனைவியுடன் இருந்தால் பாவத்தின் கனதி இன்னும் கடுமையாகும்.