நபியவர்கள் தனது தோல்புயத்தைப் பிடித்து இவ்வாறு கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நீ, இவ்வுலகில், ஒதுங்குவதற்கு வீடோ, ஆறுதலளிக்கும் நண்பனோ இல்லாத ஓர் ஊருக்கு வந்து, படைத்தவனை விட்டும் திசைதிருப்பும் காரணிகளான குடும்பம், உறவுகள் மற்றும் தொடர்புகள் போன்ற அனைத்தையும் விட்டு நீங்கி இருக்கும் ஒரு பரதேசியைப் போன்று இருந்துகொள்! அல்லது, அந்தப் பரதேசியை விட அதிகமாக, தனது வாழ்விடத்தைத் தேடி, பாதைகளைக் கடந்து செல்லும், ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள். ஏனெனில் சிலவேளை ஒரு பரதேசி ஒரு வேற்றூரில் வசித்து அங்கு தங்கிவிடலாம். ஆனால் தனது ஊரை நாடிச் செல்லும் வழிப்போக்கன் அவ்வாறல்ல. அவன் நீண்ட சுமைகளை சுமக்காமலும், தரித்துநிற்காமலும், தனது ஊரை அடையும் ஆர்வத்திலேயே இருப்பான். ஒரு பயணிக்கு, எவ்வாறு தனது பயண குறிக்கோளை அடைவதற்கு அவசியமானவற்றைத் தவிர எதுவும் தேவையில்லையோ, அவ்வாறு தான் ஒரு முஃமினுக்கு, தனது குறிக்கோளை அடைவதற்கு உதவியாக இருப்பவற்றை விட எதுவும் அவசியமாக இருக்காது. இப்னு உமர் (ரலி) அவர்கள் இந்த உபதேசத்தை நடைமுறைப்படுத்தினார்கள். அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் : 'நீ காலையை அடைந்தால், மாலையை அடைவதாக எதிர்பார்க்காதே! உன்னை, மண்ணறைகளில் வாழும் ஒருவனாகவே நீ எண்ணிக்கொள்! ஏனெனில், வாழ்க்கை என்பது, ஆரோக்கியம் மற்றும் நோய் ஆகிய இரண்டையும் கொண்டதுவே. எனவே, உனது ஆரோக்கிய நாட்களை, நோய்க்காலத்திற்காக வணக்கங்களைச் செய்து பயன்படுத்திக்கொள். நல்லமல்களுக்குத் தடையாக நோய்கள் ஏற்பட முன்னர், ஆரோக்கிய நாட்களை அவற்றிற்காகப் பயன்படுத்திக்கொள். உனது இவ்வுலக வாழ்வைப் பயன்படுத்தி, மறுமைக்குப் பயனளிப்பவற்றை அவற்றுள் ஒன்று சேர்த்துக்கொள்