அதான் என்பது தொழுகையின் நேரம் வந்து விட்டது என்பதை மக்களுக்கு அறிவிப்பதாகும். அதானின் வார்த்தைகள் யாவும் ஈமானிய நம்பிக்கையின் தொகுப்பாக காணப்படுகிறது. இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அதானை' செவிமடுக்கையில் மார்க்கத்தில் பின்பற்ற வேண்டிய விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது அதானை செவிமடுப்பவர் முஅத்தின் சொல்வது போன்று அவரும் பதில் கூறவேண்டும். உதாரணத்திற்கு முஅத்தின் 'அல்லாஹு அக்பர்' என்று கூறினால் அதானை செவிமடுப்பவர் அல்லாஹு அக்பர் எனக் கூறவேண்டும். என்றாலும் முஅத்தின் 'ஹய்யஅலஸ்ஸலாஹ் 'ஹய்யஅலல் பலாஹ்' எனக் கூறும்போது லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் எனப் பதில் கூறவேண்டும். ஒருவர் முஅத்தினுடன் சேர்ந்து அவர்கூறும் வார்த்தைகளை உளத்தூய்மையுடன் கூறினால் அவர் சுவர்க்கம் நுழைவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். அதான் வாசகங்களின் கருத்துக்கள் : 'அல்லாஹு அக்பர்' என்பது அல்லாஹ் மிகவும் தூய்மையானவன், மிகவும் போற்றுதலுக்குரியவன், மிகவும் கண்ணியமானாவன் அனைத்து விடயங்களை விடவும் பெரியவன் என்பதைக் குறிக்கும். அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ்' என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை' என்பதைக் குறிக்கும். 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்பதன் பொருள் : முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர், அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்பினான் என்பதை உள்ளத்தால் ஏற்று நாவால் சாட்சி கூறுகிறேன். என்பதாகும். மேலும் அவர்களுக்கு கட்டுப்படுவது கடமையாகும். 'ஹய்யஅலஸ் ஸலாஹ்'என்பதன் கருத்து : தொழுகைக்காக விரைந்து வருங்கள் என்பதாகும். இதனைக் செவிமடுத்தவரின் பதில் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ் என்பதன் அர்த்தம்: கட்டுப்படுவதற்கு தடையாக இருப்பவற்றிலிருந்து மீட்சி பெருவதற்குரிய வழியும்; அவற்றை செய்வதற்குரிய சக்தியும் அத்துடன் எந்த ஒருவிடயத்தையும் செய்வதற்கு வல்லமையும் அல்லாஹ்வின் உதவியின்றி கிடையாது'. 'ஹய்ய அலல்பலாஹ' என்பது வெற்றியின் வழியை நோக்கி வாருங்கள். அதுதான் சுவர்க்கத்தை வெற்றிகொள்வதும், நரகத்தை விட்டும் தப்புவதுமாகும்.