ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் பஹ்ரெயின் வாசிகளிடமிருந்து ஜிஸ்யா வரியை அறவிட்டு வர அபூ உபைதா (ரழி) அவர்களை அனுப்பினார்கள்.அவர் அங்கிருந்து மதீனாவுக்கு வந்ததும்,அதனைக் கேள்வி பட்ட அன்ஸாரிகள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து பஜ்ருத் தொழுகையில் அவருடன் இணைந்து கொண்டனர். அப்போது நபியவர்கள் தொழுகை முடிந்து திரும்பிய போது அங்கு எடுத்து வரப்பட்டுள்ள செல்வத்தைப் பார்வையிட வந்திருந்த அன்ஸாரிளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்கள்.பின்னர் அவர்களிடம்"பஹ்ரெயினிலிருந்து அபூ உபைதா வந்திருப்பதை நீங்கள் கேள்விபட்டுள்ளீர்கள் போலும்"என்றார்கள்.அதற்கு அவர்கள், "ஆம் அல்லாஹ்வின் தூதரே! அதனை நாம் கேள்விபட்டோம். எனவே நமது பங்கைப் பெற்றுக் கொள்ள வந்துள்ளோம்." என்றனர்.எனவே அவர்களுக்கு மகிழ்வைத் தரும்படியான செய்தியைக் கொண்டு அவர்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்கள் சுபமங்களம் தெரிவித்தார்கள்.மேலும் அவர்களிடம் நபியவர்கள்,செல்வந்தனை விட உண்மைக்கு மிக சமீபமானவன் ஏழை என்றபடியால் அவர்களுக்கு வறுமை உண்டாவதையிட்டுத் தான் அஞ்சவில்லை. எனினும் உலகம் அவர்களுக்குத் திறந்து கொடுக்கப்பட்டு, அதில் அவர்கள் சிக்கி விடுவதையே தான் அஞ்சுவதாகக் கூறினார்கள்.ஏனெனில் அப்பொழுது மனிதனுக்குக் கிடைப்பது போதாமல் ஆகிவிடும்.எனவே மென்மேலும் அதிகம் அடைய வேண்டுமென்பதை அவன் விரும்புவான். எனவே ஹலால்,ஹராம் என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் எந்த வழியிலேனும் பொருளீட்ட அவன் முயலுவான்.எனவே உலகின் பால் ஈர்த்துச் செல்கின்ற,மறு உலகை விட்டும் தூரமாக்கும் படியான இந்த இழிவான போட்டி நிகழும் போது அதன் மூலம் அவர்களுக்கு முந்திய சமூகத்தினர் அழிந்து போனது போன்று அவர்களும் அழிந்து போவார்கள்.என்பதே ரஸூல் (ஸல்) அவர்களின் மனவருத்தமாக இருந்தது.