பஹ்ஸ் இப்னு ஹகீம் தனது தந்தை வழியாகத் தனது பாட்டனாரைத் தொட்டும் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம், “நான் யாருக்கு உபகாரம் புரிய வேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், “உமது தாயார், பின்பும் உமது தாயார், பின்பும் உமது தாயார், பின்பு உமது தந்தை, பின்பு அதற்கு அடுத்தடுத்து நெருக்கமாக இருப்பவர்கள்” என்று கூறினார்கள். நம்பகமானது (ஹஸன்) - இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள், உபகாரம் புரிவதற்கும், நல்ல முறையில் நடந்துகொள்வதற்கும், அழகாக இணைந்து நடப்பதற்கும், சேர்ந்துநடப்பதற்கும் மனிதர்களிலேயே மிகப் பொருத்தமானவர், தாய் தான் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். ஏனையோரை விடத் தாயாருக்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் மூன்று தடவை அதனைக் கூறி, விதிவிலக்கின்றி ஏனைய அனைத்து மனிதர்களையும் விட அவரது சிறப்பைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பின்பு நபியவர்கள், அவரை அடுத்து உபகாரம் செய்யப்படுவதற்குத் தகுதியானவர் தந்தை என்றும், பின்பு அடுத்து நெருக்கமாக உள்ள உறவினர்கள் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். நெருக்கமாக உள்ள உறவினர்கள், தூரமாக உள்ள உறவினர்களை விட, சேர்ந்து நடக்கத் தகுதியானவர்களாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இந்த ஹதீஸில் தாயாரும், பின்பு தந்தையும் முற்படுத்தப்படுகின்றனர். பின்பு உறவினர்களில் - அவர்களுக்கு தரநிலைக்கு ஏற்ப - அடுத்தடுத்து நெருக்கமானவர்கள் முற்படுத்தப்படுவார்கள்.
  • பெற்றோர்களின் அந்தஸ்த்தை – குறிப்பாக தாயாரின் அந்தஸ்த்தை – உணர்த்துதல்.
  • இந்த ஹதீஸில் தாயாருக்குப் பணிவிடை செய்வது மூன்று தடவை கூறப்பட்டுள்ளது. அதற்கான காரணமாவது, அவர் பிள்ளைகளுக்குச் செய்துள்ள பேருபகாரமும், கர்ப்பச் சுமை, பெற்றெடுத்தல் சிரமம், பாலூட்டல் போன்ற பல்வேறு சிரமங்களையும், கஷ்டங்களையும் சுமந்திருப்பதும் பின்பு தந்தையுடன் இணைந்து பிள்ளையை வளர்ப்பதும் ஆகும்.