தன் பணத்தை விட தன் வாரிஸுவின் பணத்தை அதிகம் விரும்புகின்ற யாரும் உங்களில் இருக்கின்றனரா?என்று ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம் கேட்டார்கள்.அதாவது தன் வாழ்வில் தன் ஆதிக்கத்திலிருக்கும் தன்னுடைய பணத்தை விடவும்,பின்னர் தனக்கு உரித்தாகவிருக்கும் தன் வாரிஸுவின் பணத்தை எவரும் அதிகம் விரும்புவாரா, என்பதாகும்.எனவே இதனைக் கேட்ட நபித் தோழர்கள்,அல்லாஹ்வின் தூதரே!நம்மில் எவரும் தங்களின் பணத்தையே அதிகம் விரும்புவர்.-என்றனர்.அதாவது மற்றவனின் பணத்தைவிட தனது முழுக் கட்டுப்பாட்டிலும்,அதிகாரத்திலும் இருக்கும் பணத்தை அதிகம் நேசிக்காத மனிதன் எவனுமில்லை.என்பதாகும்.ஏனெனில் அவனுக்குச் சொந்தமானவைதான் அவனின் விருப்பங்களையும், தேவைகளையும் உறுதிப்படுத்தக் கூடியவை.எனவே நபியவர்கள்,"அப்படியாயின் அவன் ஏற்கெனவே செலவு செய்தது நிச்சயமாக அவனின் பணம்.அவன் தாமதப்படுத்தி வைத்தவையோ அவனின் வாரிஸுவின் பணம்"என்று கூறினார்கள்.அதாவது மனிதன் தன் வாழ்வில் தனக்காகவும்,தன் குடும்பத்திற்காகவும், செலவு செய்தவையும்,மற்றும் அவன் மறுமையில் நன்மையை எதிர்பார்த்து ஹஜ்ஜு,வக்பு காரியங்களிலும், பள்ளிவாசல்கள்,மற்றும் வைத்தியசாலைகளை நிர்மாணித்தல் போன்ற கருமங்களிலும் அவன் செலவு செய்தவைகளே உண்மையில் அவனின் செல்வங்களாகும்.ஆனால் அவன் தன் வாழ்வில் செலவு செய்யாமல் கஞ்சத் தனமாகச் சேமித்து வைத்தவைகள் அவனின் சந்ததிக்குரிய செல்வங்களாகும் என்பது இதன் கருத்தாகும்.மேலும் இந்த ஹதீஸின் கருத்தினை அப்துல்லாஹ் இப்னு ஷுகைர் அவர்களைத் தொட்டும் முஸ்லிம் அறிவித்திருக்கும் ஒரு ஹதீஸும் உறுதி செய்கின்றது.அதன் விவரம் வருமாறு:நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்தேன்.அப்பொழுது நபியவர்கள் الهكم التكاثر என்ற அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.அதனைத் தொடர்ந்து "மனிதன் எனது செல்வம்,எனது செல்வம் என்று கூறுகிறான்.ஆனால் மனிதா!உனது செல்வமோ நீ சாப்பிட்டு கழித்தவை,அல்லது நீ உடுத்திப் பழசு படுத்தியவை,அல்லது நீ தர்மம் செய்து முன் கொண்டு சென்றவை" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஷுகைர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மனிதன் தன் செல்வத்தை எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் செலுவு செய்து விட்டு தானும் தன் பிள்ளைகளும் மக்கள் மத்தியில் கையேந்தி திரிய வேண்டுமென்பது இதன் பொருளல்ல.மாறாக தனக்கும் தான் உணவளிக்கக் கடமைப்பட்டுள்ள தன் மனைவி, மக்கள்,பெற்றோர் என்போரினது செலவுக்குப் போக மேலதிகமானதை தனக்குப் பின் தன் வாரிஸுக்காக சேமித்து வைப்பதற்கு மனிதன் எப்படி பிரயாசப்படுகின்றானோ அது போன்று அவன் தன் மறுமைக்காகவும் சேமித்து வைக்கப் பிரயாசைப்பட வேண்டு மென்பதே இதன் கருத்தாகும்.இதனை அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸும் பறைசாட்டுகிறது.அவர் அறிவிப்பதாவது"ஆதமின் மகனே! மேலதிகமாக இருப்பதை நீ செலவு செய்து விடுவது உனக்கு நல்லது.நீ அதனைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது உனக்குத் தீயது"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று அறிவித்துள்ளார்கள்.மேலும் இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.(இல-2/718,1036)